Tuberculosis எனப்படும் காசநோயானது, Mycobacterium tuberculosis எனப்படும் பக்டீரியாவினால் உடலில் ஏற்படுத்தப்படும் பாரியதொரு தொற்று நோயாகும். இது பிரதானமாக நுரையீரலைத் தாக்கி நோயை ஏற்படுத்தினாலும், அதற்கு மேலதிகமாக நிணநீர் கணுக்கள், நுரையீரலைச் சூழவுள்ள மென்சவ்வு, மூளை முண்ணான் போன்ற நரம்பு மண்டலத் தொகுதி, பிரதானமாக முதுகுப் பகுதியில் காணப்படும் என்பு, மூட்டுக்கள், பாலுறுப்புக்கள் போன்றவற்றிலும் இந்த நோயின் தாக்கம் அறியப்பட்டுள்ளது. இது Extrapulmonary Tuberculosis எனப்படும்.
இதன் தொற்றுப்பரவலைப் பார்த்தால், அண்மையில் பரவிவரும் கொரோனா வைரஸ் போன்று ஒருவர் தும்மும் போது, இருமும் போது, கதைக்கும் போது அல்லது பலமாக சிரிக்கும் போது வெளிவருகின்ற நுண்ணிய சுவாசத் துகள்கள் வளிமண்டலத்திலே விடப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான நோய் காவும் கிருமிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த கிருமிகள், இன்னொருவர் சுவாசிக்கும் போது அவரது நுரையீரலைச் சென்றடைந்து, அங்கிருந்து இரத்த ஓட்டத்தின் மூலம் வேறு அங்கங்களுக்குச் சென்றடைந்து நோயை ஏற்படுத்துகிறது.
அரசாங்க தகவலின் படி, இலங்கையில் சராசரியாக 62 – 66% காசநோயாளிகள் இருக்கின்றனர். National programme for tuberculosis control and chest diseases என்கின்ற அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து அண்மையில் NTB Strategy எனும் ஒரு செயல்திட்டத்தை உறுவாக்கியுள்ளனர். இதன் பிரதான நோக்கமாக 2035 ஆம் ஆண்டளவில் புதிதாக காசநோய் ஏற்படுபவர்களின் வீதத்தை 90-95% இனால் குறைத்தலாகும். இந்த நோக்கத்தை அடைய, காசநோய்க்கான அறிகுறிகள் தென்படுபவர்கள், தாமாகவே முன்வந்து காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது ஒரு சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த நோயாக இருப்பதனால், காலம் தாழ்த்தி அறியப்பட்டால் இதன் பாதிப்புகள், தொற்றுடையவருக்கு மட்டுமல்லாது அவரைச் சூழவுள்ள அனைவரையும் இது பாதிக்கின்றது. இதைவிட நோயாளியின் அங்கங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களும் மிக அதிகமாக இருக்கும். பெரும்பாலானவர்களில் இந்த தொற்று மறை நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வாறு மறைநிலையில் காணப்படும் கிருமிகள், ஒருவருடைய நோய் எதிர்ப்பாற்றல் பலவீனமடையும் சந்தர்ப்பங்களில் நோயை ஏற்படுத்தி, நோய்க்கான குணங்குறிகளை வெளிக்காட்டும்.
நோய்க்கான அறிகுறிகளாக, நீண்ட காலம் மாறாத இருமல், இருமலுடன் சேர்ந்து சளி வெளியேறுதல், சளியுடன் இரத்தம் வெளியேறுதல், மார்புப் பகுதியில் வலி, பசியின்மை, உடல் எடை குறைதல், இரவில் அதிகமாக வியர்த்தல் போன்றவை காணப்படலாம். நுரையீரலுக்கு மேலதிகமாக வேறு அங்கங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான அறிகுறிகளும் தென்படலாம். உங்களுக்கு காசநோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கான மருத்துவ சிகிச்சையை நீங்கள் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்த சிகிச்சையானது உங்களுக்கு மட்டுமல்லாது உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும். இந்நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் குறைந்தது ஆறு மாத காலத்துக்கு மருந்துகளை எடுக்க வேண்டியது அவசியம். இம்மருந்துகளை மிகவும் நேர்த்தியாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒழுங்கற்ற விதத்தில் இம்மருந்துகளை எடுத்தால் காசநோய்க் கிருமிகள் விகாரமடைந்து, நோயின் வீரியம் அதிகரித்து உயிராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அத்துடன் மருந்து எதிர்ப்புடன் விகாரமடைந்த கிருமிகள் உருவானால், அவற்றை எம் உடலில் இருந்து வெளியேற்றுவது கடினமாகும்.
இனி, காசநோய் தொற்றுக்குள்ளானவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி பார்ப்போம். இதில் மிக முக்கியமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகளை வைத்தியர்கள் அறிவுறுத்தியபடி தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதனையடுத்து, அவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் தம்மிலிருந்து மற்றாவர்களுக்கு நோய் தொற்று பரவாத வகையில் கைக்குட்டைகளை பாவிக்க வேண்டும். பாவித்த கைக்குட்டைகளை மிகவும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கைகளைப் பயன்படுத்தி இருந்தால் அவற்றை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். எம்மைச் சூழவுள்ளவர்களை தொற்றடையாமல் பாதுகாக்க, இக்காலத்தில் யாரையும் அதிகளவு சந்திக்காமல் இருக்க வேண்டும். அத்துடன் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தொற்று கண்டறியப்பட்ட ஆரம்ப காலங்களில் பொது இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று அதற்கான பரிசோதனைகளைச் செய்து, தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கான சிகிச்சைகளைப் பெற்று உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Dr. M. ஆதவன்
சுவாசநோய் வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.
The post நோயற்ற சுவாசம்… appeared first on Thamilhealth.com | Health Information in Tamil.